ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் பருவதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் எடுத்துக் கொள்ளும் சரியான உணவுகளின் மூலமே குழந்தையின் மன வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் உள்ளது. எனவே தான் பெண்களை கர்ப்ப காலத்தில் மிகவும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ளச் சொல்கின்றனர்.

அதே சமயம் பெண்கள் தங்கள் உடலில் நீர்மச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். அதற்கு தண்ணீரை அதிகம் குடிப்பதுடன், நீர்ச்சத்தின் அளவை அதிகரிக்குமாறான பானங்களை பருக வேண்டும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்றவாறான சில ஆரோக்கிய பானங்களை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் எடுத்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, மலச்சிக்கல், சிறுநீரக பாதைத் தொற்று போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

சரி, இப்போது கர்ப்பிணிகள் குடிப்பதற்கு ஏற்றவாறான அந்த ஆரோக்கிய பானங்களைப் பார்ப்போமா!!!

க்ரீன் டீ

கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பது நல்லதல்ல என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அளவாக குடித்து வந்தால், ஆரோக்கியமாக இருக்கலாம். குறிப்பாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பால்

கர்ப்பிணி பெண்களுக்கு பால் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருள். இதனால் அவர்களின் உடலில் நீர்ச்சத்து மட்டுமின்றி, கால்சியமும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, பாலானது செரடோனின் அளவை அதிகரித்து, மனதை அமைதிப்படுத்தும். ஆகவே அத்தகைய பாலில் எவ்வித பொருட்களையும் சேர்க்காமல் கர்ப்பிணிகள் குடித்து வர வேண்டும். அதிலும் கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2 முறை தவறாமல் பால் குடிக்க வேண்டும்.

அவகேடோ ஸ்மூத்தி

கர்ப்பிணிகளுக்கு அவகேடோ மிகவும் ஆரோக்கியமான பழம். எனவே அத்தகைய பழத்தை ஸ்மூத்தி போன்று செய்து குடித்தால், இரத்த அழுத்தம் சீராக இருப்பதுடன், உடலில் உள்ள மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களும் சீராக இயங்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளதால், இதனை கர்ப்பிணிகள் குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றல் அதிகரித்து, கர்ப்ப காலத்தில் நோய் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவியாக இருக்கும்.

சீமைச்சாமந்தி டீ

சீமைச்சாமந்தி டீ கூட கர்ப்பிணிகளுக்கு ஏற்ற அட்டகாசமான பானங்களுள் ஒன்று. ஏனெனில் இதில் உள்ள சிறந்த மருத்துவ குணங்கள், கர்ப்ப காலத்தை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்ள உதவுவதுடன், குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

செர்ரி ஜூஸ்

செர்ரி ஜூஸை கர்ப்பிணிகள் குடித்து வந்தால், இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். இப்படி நிம்மதியான தூக்கம் கிடைத்தால், மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு, ரிலாக்ஸாக இருக்கலாம்.

இஞ்சி டீ

கர்ப்ப காலத்தில் காலை வேளையில் ஏற்படும் சோர்விற்கு கர்ப்பிணிகள் இஞ்சி டீ வைத்துக் குடித்தால், அதனை உடனே சரிசெய்யலாம். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணிகள் இஞ்சி டீயை குடிக்கும் போது, அவர்களின் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button