ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிந்துகொள்வோமா? பனம்பழத்தில் பல் துலக்கலாமா?…

சில பெயர்களை இந்த காலத்தில் சொன்னால், இது என்ன பாஷை, என்று செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவனைப் பார்ப்பதுபோல, விநோதமாகப் பார்க்கும் தலைமுறைகள் வாழும் காலமிது.

அதேபோல, முன்னோர்கள் போற்றிக் கொண்டாடியவற்றை, அவை மனிதனுக்கு தரும் நன்மைகளை, தற்காலத்தில் பகிர்ந்துகொண்டாலும், அந்நியனாகும் நிலைதான். தேசத்தில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு மரம், வானுயர்ந்து வளர்ந்து, நிற்கும் மரம், அதன் ஒவ்வொரு அணுவும், இந்த மண்ணும் மக்களும் பயனுறவே எனது வாழ்வு, என்பதை நிரூபிப்பதுபோல, அதன் எல்லாப் பகுதியும், மனிதர்க்கு பயன்பட்ட மரம், அந்த மரம், பனைமரம்.

வேறுபெயர்கள்

பனை மரத்தின் பெருமையை, ஒரே வரியில் சொல்வார்கள், கேட்டதைக் கொடுக்கும் கற்பகத்தரு என்று. நமது இதிகாசங்களில் சொல்லப்பட்ட கற்பகத்தரு, வானுலகில் இருக்கிறது, பனை மரமோ, பூலோகம் எனும் இந்த பூமியில், நம்மிடையே, இருக்கிறது. நாம் கேட்கும் அனைத்தையும் தரும், உயர்ந்த மரமாக இருக்கிறது. இது நம் முன்னோர்கள் நமக்கு அளித்த கொடை.

பனை மரத்தை வளர்த்தவருக்கு பயன்கள் தருவதைவிட, அவர்களின் தலைமுறைகளுக்கு என்றென்றும் பயன்கள் தரும் வகையில், பனை மரத்தின் வளர்ச்சி இருக்கும். விதைத்து, பல வருடங்கள் கழிந்தே, அதன் விளைச்சல் என்பதால், தற்காலங்களில் அதிகம் யாரும் பனையை விதைப்பதில்லை. இன்று நாம் காண்பதெல்லாம், நமக்கு இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் பயிரிடப்பட்டவை.

நுங்கும் பதநீரும்

பனைமரங்கள், மூலம், நாம், கோடையை நலமுடன் கடக்க, நுங்கு, பதநீர் போன்றவற்றை சுவைத்திருப்போம். போதை ஆர்வலர்கள், தடை இல்லாத காலத்தில், மரத்திலிருந்து இறக்கிய உடனே, குடித்து மகிழ்ந்த ருசியான பனங் கள்ளை, மனதில் வைத்திருப்பார்கள்.

ஆயினும், சிலர் மட்டுமே, பனம் பழத்தை சுவைத்திருப்பார்கள். சுவைத்து, அதன் நற்சுவையில், மனம் திளைத்திருப்பார்கள். இதுபோல, ஒருபழம், உலகில் இல்லை, என்றிருப்பார்கள். அத்தனை சுவைமிக்க பழம்.

பனம்பழம்

பனம்பழத்தை சுவைப்பது இருக்கட்டும், பனம்பழம் என்றால் என்ன என்கிறீர்களா?

பனை மரத்தில் இருந்து, சுவையான நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு, மற்றும் பனங்கிழங்கு கிடைப்பது தெரியும். பனைமரத்தில் காய்த்து பறிக்காமல் முற்றிய நுங்குகளே, பனம்பழம் ஆகின்றன. முதிர்ந்த பழங்கள், மரத்திலிருந்து, கீழே விழும்முன், பனை மரம் ஏறுபவர்கள், பழங்களை வெட்டிக் கீழே தள்ளிவிடுவார்கள். கீழே விழும் பழங்கள், நல்ல நறுமணத்துடன் இருக்கும், பனம்பழ வாசம் காற்றில் பரவி, மூக்கைத் துளைக்கும்.

சுட்ட பழமா?… சுடாத பழமா?…

சுட்ட பனம் பழமா? சுடாமல் வேகவைத்த பனம் பழமா? எதில் சுவை அதிகம்?

அக்கால சிறுவர்கள் எல்லாம், இன்றுபோல, காசு கொடுத்து உடல்நலம் கெடுக்கும் துரித உணவுகள், சிப்ஸ் போன்றவற்றை வாங்கி, உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டதில்லை.

பனம்பழ வாசனை வந்ததும் ஓடும் சிறுவர்கள், பழங்களை சேகரித்துக்கொண்டு, குச்சிகள் மூலம் சிறு அடுப்பு மூட்டி, அதில் பனம்பழத்தை சுடுவார்கள். அல்லது சிலர் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, வேகவைத்து தரச் சொல்வார்கள். பனம் பழத்தை, வெறுமனே, சாப்பிட முடியாது. அதை சுட்டோ அல்லது அவித்தோதான், சாப்பிட வேண்டும்.

ஜாம் தயாரிப்பு

பனம் பழத்தை சேகரித்து, அதிலிருந்து எடுக்கப்படும் பழக்கூழ், பல இனிப்புகளில், ஜாம் போன்ற பழக்கலவைகளில், முக்கியப்பொருளாகச் சேர்க்கப்படுகிறது.

பனம்பழத்திலிருந்து, எடுக்கப்படும் சாறை, வெயிலில் உலர்த்தி, அதன்மீது, மீண்டும் சாற்றை ஊற்றி, நன்கு காய்ந்து, இறுகியதும், இனிப்புக் கட்டிகளாக, இலங்கை, மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில், பயன்படுத்துகின்றனர்.

உடல் நலம் தரும் பனம் பழம்

இனிப்புச் சுவைமிக்க வாசனையான பனம் பழத்தில், உடலுக்கு வலுவும் ஆற்றலும் தரக்கூடிய அநேக சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கண் பார்வைத் திறனை அதிகரிக்கக்கூடிய, பீட்டா கரோடின் எனும் வைட்டமின் A சத்து, செறிவாக உள்ளது.

சிறு வயதில், பனம் பழத்தை ருசித்தவர்கள், பனம்பழத்தை உண்ட பனையேறிகள் ஐம்பது வயதைக் கடந்தபின்னரும், கண்களுக்கு கண்ணாடி போன்ற எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள்.

பனம்பழ டூத் பேஸ்ட்

இனிப்பு சுவைமிக்க பனம் பழம், எப்படி பல் துலக்கும் பற்பசையாக இருந்திருக்க முடியும் என்று பலரும் நினைக்கலாம். இலங்கையில், போர்மேகங்கள் சூழ்ந்திருந்த நாட்களில், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கே, பெரும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், பல் துலக்க பற்பசை, துணிகளை துவைக்க சோப் போன்ற எதுவும் கிடைக்காமல், மக்கள் தவித்தனர். அந்த சமயத்தில், போரில் ஈடுபட்ட வீரர்களுக்கும், மக்களுக்கும், பனம் பழ நார்களில் இருந்த ஜெல்லே, பற்பசையாகப் பயன்பட்டது, இந்த ஜெல்லைக் கொண்டு பற்களைத் துலக்க, பற்களில் படிந்திருந்த கிருமிகள் அழிந்து, பற்கள் சுத்தமாகி, வாயும் நறுமணமானது. இது போல, கொட்டையுடன் கூடிய, ஜெல் நிரம்பிய பனம் பழ நாரே, அக்காலத்தில், துணி துவைக்கும் சோப்பாகப் பயன்பட்டு வந்தது. மேலும், பனம்பழ ஜெல்லைக் கொண்டு, கை கால் அழுக்குகளை நீக்கி, சுத்தம் செய்யவும், பயன்படுத்தினர்.

300 ஆண்டுகள் ஆயுள்

கிட்டதட்ட 300 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட பனைமரம் எவ்வளவு வறட்சியையும் தாங்கவல்லது. 300 ஆண்டுகளுக்குப் பின், பனை பூ பூக்க ஆரம்பிக்கும். பூத்துக் குலுங்கிய பின்,அது இந்த பூமிக்கு அதுவரை ஆற்றி வந்த சேவையை முடித்துக் கொள்ளும். மரம் பட்டுபோய்விடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button