ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!…

நம்மில் பலருக்கு உடல் ஆரோக்கியமாக உள்ளதா? என்ற கேள்விக்கு நமக்கு பதில் கூறத் தெரியாது. செரிமானப் பிரச்னை, அதிக உடல்எடை, சிறுநீரகக் கற்கள்,மலச்சிக்கல் என ஏதாவதொரு உடல் உபாதையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இவையனைத்திற்கும் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தாலே போதும் என நமக்குத் தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

நம் முன்னோர்கள் தண்ணீரின் முக்கியத்துவத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு பல்வேறு நுால்களில் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக திருக்குறளில் ஒரு குறளில்,

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்றி அமையாது ஒழுக்கு
என்று செந்நாப்போதர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குறளின் விளக்கம் என்னவென்றால், நீர் இல்லாமல் எந்த உயிரும் உலகில் வாழ முடியாது என்பதுதான். அப்படிப்பட்ட இந்தத் தண்ணீரின் மகத்துவம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.

drink water 1
Start your day with some warm lemon water

தண்ணீர் என்றால், வெறும் தாகத்திற்குக் குடிப்பததுதான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தாகத்திற்குக்கூட தண்ணீரை குடிக்காமல், பாட்டிலில் அடைக்கப்பட்டு ஜீஸ் என்ற பெயரில் கெமிக்கலைக் குடித்துவருகின்றனர்.

இதைக் குடிப்பதால், நம் உடலில் பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் தண்ணீர் அதிகம் குடிப்பதே கிடையாது. அவர்கள் விருப்பப்பட்டுக் கேட்கிறார்கள் என்று டப்பாவில் பதப்படுத்தப்பட்ட கெமிக்கலை நாமே குடிக்க வாங்கிக் கொடுக்கிறோம். இதனால் அவர்கள் சிறுவயது முதலே பலவகை உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இன்னும் சில நாள்களில், தாகத்திற்கு சாதாரணமாக கடைகளில் ஜீஸ் கிடைக்கும். ஆனால், குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

மேலும், தண்ணீரைக் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும், காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் நமது உடலுக்கு என்னன்ன நன்மைகள் ஏற்படும் என்று தெரியுமா?

வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன்மூலம், குடல் சுத்தமாக்கப்படுகிறது. இதன்மூலம் நம் குடலில் எந்தவித புழுக்களும், கசடுகளும் தங்காதவண்ணம் தூய்மைப்படுத்தப்படும்.

குடல் சுத்தமாக்கப்பட்டால் மட்டுமே நம்முடைய முகத்தில் பருக்கள் எதுவும் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். மேலும், முகம் அழகாகக் காணப்படும்.

தினந்தோறும் இப்படி தண்ணீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது. மேலும், சீறுநீரகத்தில் கற்கள் சேராமல் ஆரோக்கியமாக இருக்கும்.
அல்சர் நோயாளிகள் காலையில் தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படுவது குறைந்து விரைவில் குணமாகும்.

நம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களில் பிராணவாயு உள்ளது. தண்ணீர் குடிப்பதன்மூலம் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் பிராணவாயு பெருகி நம் உடலானது எப்போதும் ஆற்றலுடன் இருக்கும்.

இவை எல்லாவற்றையும்விட நம்மில் பலர் உடலை எப்படிக் குறைப்பது என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஆசனம், டையட், உடற்பயிற்சி, நடைபயிற்சி, உணவைக் கட்டுப்படுத்துதல் என செயல்களில் ஈடுபடுவார்கள். இவையனைத்தும் நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கக் கூடியவைதான். ஆனால், காலையில் வெறுவயிற்றில் குடித்தால் உடல் எடைக் குறையும் என நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.

தொடர்ந்து காலை தண்ணீர் அருந்தி வந்தால், உடலை எடையை குறைப்பது மட்டுமல்ல, உடலின் ஆரோக்கியத்தையும், நோய்கள் வராமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

சுடு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் காலை சுடு தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளை கரைக்கிறது. இதனால் நம் உடல் மெலிந்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

மேலும், செரிமானச் சக்தி அதிகரிக்கிறது. காலையில் சுடு தண்ணீரில் தேன் கலந்துகுடித்து வந்தாலும், உடல் எடை விரைவில் குறையும்.
சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சீரகத்தைச் சேர்த்து கொதிக்கவைத்த தண்ணீரை தினமும் காலையிலும், இரவில் துாங்குவதற்கு முன்பும் குடித்து வந்தால், சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. சிறுநீரகக் கற்கள் ஏற்கனவே இருந்தாலும், இந்தத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பதன்மூலம் சிறுநீரகக் கற்கள் விரைவில் வெளியேற்றப்படும். ஜீரண சக்தியும் அதிகரிக்கிறது.

தினமும் குறைந்தது எட்டு டம்ளர் முதல் பத்து டம்ளர் (3 லிட்டர்) தண்ணீராவது குடிக்க வேண்டும். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறையாவது ஒரு டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும்.

இப்படி வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடித்தாலே இவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்று தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! இனிமேல் தினமும் காலை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button