ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்

வல்லாரை

பொதுவான தகவல்கள் : வல்லாரை (Centella asiatica) அல்லது சரஸ்வதி கீரை என்பது ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுடைய கீரை வகைத் தாவரமாகும். ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளுக்கு உரியதாகும். இது நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் தாவரம். இதன் இலைப் பகுதிகள் உணவாகப் பயன் படுவதால் இத்தாவரம், கீரையினங்களுள் அடங்கும்.

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன.

இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.

இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது.

மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.

வல்லமை மிக்க கீரை என்பதால் இது வல்லாரை எனப்பெயர் பெற்றது. ஞாபக சக்தியை அதீதமாக மேம்படுத்துவதால் இதனை சரஸ்வதி கீரை என்றும் அழைக்கின்றனர். இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து ‘சி’ மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. இரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது.

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது. எனவே தான், இதனை சரஸ்வதி மூலிகை என்றும் அழைக்கின்றனர்.

இக்கீரையை உண்ணும் முறை:-

1. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

2. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.

3. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

4. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.

(i) இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை, பாகற்காய் ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

(ii) புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

5. சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

6. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

வல்லாரையின் விவரமான மருத்துவப் பயன்கள்:

* அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக வாயிலிட்டு மென்று தின்னவும். நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருந்து, நன்கு பசியெடுத்தபின் அரை லிட்டர் பசும்பால் அருந்தவும். கூடியவரையில் உப்பு, புளி குறைத்த உணவினை உண்டு வர, மனநோய்களில் உண்டாகும் வன்மை மறைந்து, மென்மை உணர்வு மேலோங்கும். இதனால் சகல பைத்திய நோய்களும் தீரும்.

* வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்.

* வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் – ஆகியவற்றை அம்மியில் விழுதாய் அரைத்து, அதைப் பாலில் கலந்து காலையும் மாலையும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர, அன்னையின் அருளால் இதயநோய்கள் மாயமாய் மறையும்.

* குழந்தைகட்கு காணும் சீதபேதிக்கு 1-2 இலையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சர்க்கரைக் கூட்டிக் கொடுக்கக் குணமாகும்.

* கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தேவையான அளவில் சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் சுட்டு சாப்பிட்டு வர, படை, நமைச்சல், தோல் நோய்கள், குஷ்டம் போன்றவை விலகும்.

* வல்லாரைத் துவையல் உண்ண முகப்பரு குணமாகும்.

* வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக்கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் காலை, மாலை உணவுக்கு முன்பாக இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தி வர, அறிவு மேம்படும். நினைவாற்றல் பெருகும். அன்னை அருளால் அற்புதமான மூளை பலம் உண்டாகும்.

* அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக்கொண்டு, காலையும் மாலையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வர, வலிப்பு குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் மறையும்.

* 10 கிராம் வல்லாரைப் பொடியுடன், 5 கிராம் அதிமதுரத் தூள் கலந்து இரவில் தூங்கப் போகும் முன் தின்று வெந்நீர் குடிக்க மலச்சிக்கல் தீரும்.

* வல்லாரைக் கீரையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், வாய்ப்புண், வாய் நாற்றம் போன்றவை குணமாகும்.

* அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, காமாலை குணமாகும்.

* வல்லாரை இலைச்சாற்றில் அரிசித் திப்பிலியை ஊறவைத்து உலர்த்தித் தூள்செய்து வைத்துக்கொள்ளவும். இதில் நான்கு சிட்டிகை அளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு, இருமல் ஆகியவை குணமாகும்.

* வல்லாரை இலைத் தூளுடன் சோம்புத் தூள் (சிட்டிகை அளவு) எடுத்து கலந்து தின்று வெந்நீர் குடித்து வர உஷ்ண வயிற்று வலி தீரும்.

* நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துவதிலும் வல்லாரை சிறந்த மூலிகையாக உள்ளது.

* நிழலில் உலர்த்தித் தூள் செய்த வல்லாரைத் தூள் 100 கிராம், அமுக்கரா கிழங்குத்தூள் 100 கிராம் – இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனை இரண்டு கிராம் அளவில் காலை – மாலை தேனுடன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர, உடல் வலிமை, ஆரோக்கியம் உண்டாகும். இளைத்த உடல் பருக்கும். வல்லாரை இலைகளை அரைத்து தினசரி காலை நெல்லிக்காய் அளவு வீதம், 21 நாட்கள் சாப்பிட வாய்வு, விரை வீக்கம் தீரும்.

* கைப்பிடி அளவு வல்லாரை இலை இதே அளவு மணத்தக்காளி கீரை எடுத்து அரைத்து சாறு எடுத்து காலை, மாலை ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வர இரண்டு வாரத்தில் ரத்த சோகை நோய் தீரும். வல்லாரை இலையை தின்று வர உடல் உஷ்ணம் தணியும்.

* வல்லாரை இலைகளை அரைத்து புண்கள் மீது தடவி வர, புண்கள் சீக்கிரத்தில் ஆறும்.

* வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.

* வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.

* வல்லாரைச் சாறு, தேனுடன், மணத்தக்காளிச் சாறையும் கலந்து காமாலை கண்டவர்களுக்குக் கொடுப்பார்கள். இதனால் அதிவிரைவில் காமாலை குணமாகும்.

* வல்லாரை இலையுடன் வெந்தயமும் சேர்த்துக் குடிநீரிட்டு, 1 அல்லது 2 சங்கு குழந்தைகளுக்குப் புகட்ட, ஜுரம், வயிற்றுக் கோளாறுகள் தீரும்.

* வல்லாரை கீரையை அனுதினமும் உணவில் சேர்த்து வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் வலிமை பெறும்.

* வல்லாரையை பால் விட்டு அரைத்து காலை, மாலை சாப்பிட இளமை பெருகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.vallarai

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button