மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…ஒவ்வொருவரும் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய புற்றுநோய்க்கான அறிகுறிகள்!

புற்றுநோய்! அறிவியலும், மருத்துவமும் வானளவு வளர்ந்திட்ட போதிலும் கூட இன்றளவிலும் நம்மை பயம் கொள்ள வைக்கும் ஓர் நோய். பல சமயங்களில் நம் உடலில் உருவாகும் கற்களை சிலர் புற்றுநோய் என எண்ணி அஞ்சுவது உண்டு. ஆம், புற்றுநோய் இன்றளவும் உயிர்கொல்லியாக தான் காணப்படுகிறது. இதை பூரணமாக குணப்படுத்த மருந்துகள் கண்டறியப்படவில்லை. ஆனாலும், ஆரம்ப காலக்கட்டத்தில் இதை கண்டுணர்ந்துக் கொண்டால் பல உயிர்களை காக்க இயலும். சில புற்றுநோய் சிகிச்சைகளின் மூலம், ஆரம்ப காலக்கட்டத்தில் கண்டறியப்பட்ட புற்றுநோயை குணப்படுத்தியுள்ளது நமது மருத்துவ உலகம்.

 

சரி, புற்றுநோயை கண்டுணர உள்ள அறிகுறிகள் என்னென்ன என அறிந்துக்கொள்ளலாம்? இதில் சில சாதாரண கோளாறுகளாகவும் இருக்கலாம். எனவே, யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை. மேலும் படியுங்கள்…

திடீர் எடை குறைவு

எந்த ஒரு உணவுக்கட்டுப்பாடோ அல்லது உடற்பயிற்சியோ இன்றி திடீரென உடல் எடை குறைவு ஏற்படுவது ஒருவகையான புற்றுநோயின் ஆரம்பக்கால அறிகுறியாக இருக்கலாம். இது வயிறு அல்லது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

சிறுநீர், மலத்தில் இரத்தம் கசிதல்

நல்ல செரிமானம் தான் ஓர் நல்ல உடல்நலத்தை உறுதி செய்கிறது. ஒருவேளை உங்களது சிறுநீரிலோ அல்லது மலத்திலோ இரத்தம் கசிவு ஏற்படுவதை நீங்கள் கண்டுணர்ந்தால் நேரம் தவர்த்திடாது மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில், இந்த அறிகுறி பெருங்குடல் அல்லது சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்.

மச்சங்களில் மாற்றம்

தோல் புற்றுநோயின் ஒருவகையான அறிகுறிகளில் மச்சங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் ஒன்றென கூறப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு இந்த வகையான புற்றுநோய் தாக்கம் எளிதில் ஏற்படுகிறது என ஓர் ஆராய்ச்சியின் முடிவில் கூறப்பட்டுள்ளது. திடீரென மச்சங்களின் நிறம், அதனுடைய அளவில் மாற்றங்கள் ஏற்படுவது தோல் புற்றுநோயின் அறிகுறிகளாக சொல்லப் படுகிறது.

மாதவிடாய் காலங்களுக்கு இடையில் இரத்தப்போக்கு

பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் நாட்கள் அல்லாமல், இடையில் இரத்தப் போக்கு ஏற்படுவது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதிலும் அது கருப்பை வாய் வீக்கம் அல்லது அலர்ஜி, இரத்த அழுத்தம் மற்றும் மெலிவடைதல் போன்றவை எல்லாம் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது.

வயிறு உப்புதல்

வயிறு உப்புதல் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான கோளாறாக இருப்பினும், பெண்களுக்கு இது புற்றுநோய்க்கான ஓர் அறிகுறியாகக் கருதப்படுகிறது. அஜீரணம், மாதவிலக்கு மற்றும் பிள்ளைப்பேறு காலங்களில் இது போன்ற வயிறு உப்புதல் இயல்பாக ஏற்படும். எனினும், வயிறு உப்புதல் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில் இது கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கக்கூடும்.

விதைப்பைகளில் மாற்றம்

புற்றுநோயை எப்படி கண்டறிவது? விதைப்பைகளில் ஏற்படும் மாற்றமானது ஆரம்பக்கால புற்றுநோய்க்கான அறிகுறியாக கருதப்படுகிறது. உங்களது விதைப்பையில் வலியோ, கட்டியோ அல்லது வீக்கமோ ஏற்படுவதாக நீங்கள் அறிந்தால், உடனடியாக மருத்தவரிடம் பரிசோதிப்பது நல்லது. ஏனெனில், இது விதைப்பை புற்றுநோயாக இருக்கக்கூடும். பெரும்பாலான மருத்துவர்கள் 15 முதல் 55 வயது வரை உள்ள ஆண்களை மாதம் ஒரு முறை சுயப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என கூறுகின்றனர்.

சிறுநீர் கழித்தலில் பிரச்சனை

சிறுநீர் கழித்தலில் கோளாறு ஏற்படுதல், சரியாக சிறுநீர் வராது இருத்தல், சிறுநீரில் இரத்தம் கசிதல் போன்றவை புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கக் கூடும் எனவே, இத்தகைய அறிகுறிகள் அறிய நேரும் போது உடனடியாக மருத்தவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.

மார்பக அளவில் மாற்றம்

மார்பக புற்றுநோய் தற்போதைய நிலையில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான நோயாக உருவெடுத்துள்ளது. இதை கண்டுணர சில அறிகுறிகள் உள்ளன. அவை, மார்பக அளவு மாறுப்படுதல், வீக்கம் அல்லது கட்டி ஏற்படுவது, மார்பக சருமத்தில் அல்லது முலைகளில் நிறம் மாறுப்படுதல் போன்றவை ஆகும். இந்த அறிகுறிகள் புற்றுநோய்க்கான அறிகுறிளாக மட்டுமே அல்லாமல், இதர மார்பக கோளாறுகளுக்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம்.

தொடர்ந்து இருக்கும் வலி

சொல்ல முடியாதவாறு உடலில் வலியானது மாதக் கணக்கில் தொடர்ந்து இருக்கிறதெனில் இது எலும்பு, மூளை அல்லது வேறு வகையான புற்றுநோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, உடலில் வலியானது குறையாது மாதக் கணக்கில் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளவும்.

வழக்கத்திற்கு மாறான சோர்வு

சோர்வடையும் வகையில் எந்த செயலும் செய்யாத போதிலும் நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி உடல் சோர்வாக உணர்ந்தால் இதுவும் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியாக இருக்கலாம்.

விழுங்குவது கடினமாவது

நீர் அல்லது உணவினை விழுங்கும் போது தொண்டையில் வறட்சியோ அல்ல வலியோ ஏற்படுவது டிஸ்பாஜியா எனப்படும் தொண்டையில் ஏற்படும் இடர்பாடு கோளாறு ஆகும். ஆனால், இது தொடர்ந்து இருக்கிறது எனில் மருத்தவரிடம் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். ஏனெனில், இது தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

இருமல்

இடைவிடாது இருமல் வருவது மற்றும் இருமலில் இரத்த கசிவு ஏற்படுதல் போன்றவை நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள். இது பெரும்பாலும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கே ஏற்படுகிறது.

நெஞ்செரிச்சல்

அதிகமாக காபி மற்றும் காரசாரமான உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவது உண்டு. ஆயினும், இது இதயம் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது.

காய்ச்சல்

இடைவிடாது அவ்வப்போது அதிக அளவில் காய்ச்சல் ஏற்படுவது பலவகை புற்றுநோய்களுக்கு அறிகுறிகளை கூறப்படுகிறது. எனவே, காய்ச்சல் குறையாது நீடிக்கும் போது மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்வது அவசியம் ஆகும்.

நிணநீர் முடிச்சுகளில் மாற்றம் ஏற்படுதல்

நிணநீர் மண்டலம் நமது உடலில் மிக முக்கியமான ஒன்றாகும் இது வேண்டாத கொழுப்புகள், நச்சுக்களை வெளியேற்றும் வேலைகளை செய்கிறது. கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் நிணநீர் முடிச்சுக்கள் ஏற்படுவது சாதாரண தொற்று தான் எனினும் இது சிலவகை புற்றுநோய்களுக்கு அறிகுறியாய் கூறப்படுகிறது. எனவே, இவ்வாறான பிரச்சனை ஏற்படும் போது மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது அவசியம் ஆகும்.

குறிப்பு

மேற்கூறப்பட்ட அனைத்து அறிகுறிகளும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் கூட அறிகுறிகளை இருக்கலாம் எனவே நீங்கள் கவலைக் கொள்ள தேவை இல்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button