33.4 C
Chennai
Saturday, Jul 5, 2025
201607250813050861 Targeting children chocolate addiction alert SECVPF1
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்…

குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

குழந்தைகளை குறிவைக்கும் போதை சாக்லெட்…உஷார்…
ஒரு சிட்டுக்குருவியின் முன்னால் நாலைந்து தங்க மோதிரங்களையும், சிறிது தானியங்களையும் வீசி எறிந்தால், அது தானியங்களின் பக்கம்தான் திரும்பும்.

நமக்கு வேண்டுமானால் தங்க மோதிரம் பெரிதாக இருக்கலாம். ஆனால் சிட்டுக்குருவிக்கு தங்க மோதிரம் ஒரு பொருட்டே அல்ல; அதற்கு தேவை தானியம். அதுதான் அதற்கு உணவு.

இதேபோல் தேவைகள், விருப்பங்கள் என்பது உயிரினங்களுக்கு இடையே மட்டுமின்றி, மனிதர்களுக்கு இடையேயும் மாறுபடக்கூடியது.

குறிப்பாக வயதுக்கு ஏற்ப தேவைகளும், விருப்பங்களும் மாறுபடுகின்றன. 8 வயது சிறுமியை கடைக்கு அழைத்துச் சென்று உனக்கு தேவையானதை வாங்கிக் கொள் என்றால், அவளுடைய முதல் தேர்வு சாக்லெட் ஆகத்தான் இருக்கும்.

ஏனெனில் சாக்லெட் குழந்தைகளின் விருப்பமான தின்பண்டம். சாக்லெட்டை பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது. இதனால்தான் உணவுப்பண்ட தயாரிப்பு நிறுவனங்கள் குழந்தைகளை கவரும் வகையில் விதவிதமான சாக்லெட்டுகளை விதவிதமான வடிவங்களிலும் வண்ணங்களிலும், சுவைகளிலும் தயாரிக்கின்றன.

சாக்லெட்டுகள் மீதான குழந்தைகளின் இந்த மோகத்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்.

சாக்லெட்டுகளில் கஞ்சா போன்ற போதை வஸ்துகளை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அதற்கு அடிமை ஆக்குகிறார்கள்; நாட்டின் வருங்கால தூண்களை நாசமாக்குகிறார்கள்.

இந்த போதை சாக்லெட் விவகாரம் சமீபத்தில் தமிழகத்தை உலுக்கி எடுத்துவிட்டது. பள்ளிக்கூட மாணவர்களை குறி வைத்தே இந்த வகை சாக்லெட்டுகள் விற்கப்படுகின்றன.

சென்னை நகரில் சில பள்ளிக்கூடங்களின் அருகே உள்ள கடைகளில் கஞ்சா அல்லது போதை மருந்து கலந்த சாக்லெட்டுகள் விற்கப்பட்டதும், அவற்றை மாணவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததும் சமீபத்தில் அம்பலமானது.

கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்புகளை கடுமையாக பாதிக்கும். போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், அதில் இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விஷயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும்.

குழந்தைகள் நாட்டின் வருங்கால தூண்கள். அவர்கள் சாக்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவதை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கலந்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்குவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை அரசாங்கம் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.

இந்த போதை சாக்லெட்டுகள் பற்றி குழந்தைகளுக்கு சரிவர தெரிவதில்லை. வழக்கமாக சாப்பிடும் தின்பண்டம் போல் இந்த சாக்லெட்டுகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை வீட்டில் பயன்படுத்தப்படும் சர்க்கரை மற்றும் மென்டால், குளுக்கோஸ், கலர் பொடி ஆகியவற்றுடன் போதை வாஸ்துகள் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்படுகிறது.

இதுபோன்று போதை தரக்கூடிய சாக்லெட்டுகளை வாங்கி சாப்பிடுவதால் மாணவ-மாணவிகளுக்கு ஒருவித மந்த நிலை ஏற்படும். சில சமயங்களில் மயக்கம் ஏற்பட்டு வாந்தி, பேதியும் ஏற்படும். இன்னும் சொல்லப்போனால் மனவளர்ச்சி குன்றவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுவதோடு அவர்கள் தவறான வழிகளில் செல்ல நேரிடும்.

எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது பணம் கொடுப்பதை (பாக்கெட் மணி) முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத்தான தின்பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமானவரை சாக்லெட் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் அழுது அடம்பிடித்து கேட்கும்பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பெனியின் சாக்லெட்டுகளை வாங்கிக்கொடுங்கள். அவ்வாறு சாக்லெட் வாங்கும்போது தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து வாங்குங்கள். அதற்கும் மேலாக சாக்லெட்டுகளில் அதிக நிறமேற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.

சில வகை சாக்லெட்டுகளில் ஆங்கிலத்தில் ‘பான்கேன்டி’ என எழுதப்பட்டு இருக்கும். அப்படி எழுதப்பட்டு இருந்தால் அது போதை சாக்லெட் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அப்படி இல்லையெனில், அந்த சாக்லெட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாக்கு வாசனை தெரியும். அதை வைத்தும் தெரிந்து கொள்ளலாம். இதுபற்றியெல்லாம் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருந்து தங்கள் பிள்ளைகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும்.

பொதுவாக குழந்தைகள் சாக்லெட்டுகளை விரும்பி கேட்கும்போது பெற்றோர்களும், உறவினர்களும் அந்த சாக்லெட்டின் காலாவதி காலம், அந்த சாக்லெட் தரமானதுதானா? என்பதையெல்லாம் பார்க்காமல் வாங்கிக் கொடுக்கின்றனர்

காலாவதியான சாக்லெட்டை சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அது தெரியாமல் குழந்தையை டாக்டரிடம் அழைத்துச் சென்று மருத்துவத்துக்காக பணத்தை வீணாக செலவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இனிப்பான எல்லா பண்டங்களும் குழந்தைகளுக்கு பிடிக்கும். அது உடலுக்கு நல்லதா? அல்லது தீங்கு விளைவிக்கக்கூடியதா? என்று அவர்களுக்கு தெரியாது. எனவே குழந்தைகளுக்கு சாக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டில் கட்டுமானப்பணி, ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என பல இடங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் புகையிலை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வட மாநில தொழிலாளர்களின் வருகைக்கு பிறகு நகரங்களில் கிட்டத்தட்ட எல்லா கடைகளிலும் புகையிலை பொருட்கள் கிடைக்கின்றன.

கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் வரும் புகையிலை பொருட்கள் தெருக்களில் உள்ள சாதாரண பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் கிடைப்பதால் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் புகையிலை பழக்கத்திற்கு மட்டுமில்லாமல் கஞ்சா, போதை சாக்லெட் போன்றவற்றுக்கும் அடிமையாவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.201607250813050861 Targeting children chocolate addiction alert SECVPF

Related posts

ஹெல்த் ஸ்பெஷல்… சிறுநீரக கற்களுக்கு தீர்வு தரும் அன்னாசி பழம்!

nathan

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை சாப்பிட வைப்பது எப்படி?

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகள் கேட்கும் 6 எடக்குமடக்கான கேள்விகள்!

nathan

உங்களுக்கு பக்கத்துலயே வர முடியாத அளவு தூர்நாற்றமா? அப்ப இத படிங்க!

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உங்க முதுகில் ‘இந்த’ விஷயங்கள செஞ்சா… பாக்க பளபளன்னு ரொம்ப செக்ஸியா இருக்குமாம் தெரியுமா?

nathan

மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

கண்ணீரால் கரையும் தீமைகள்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் இதையெல்லாம் மறந்தும் கூட ஃப்ரிட்ஜ்ல வச்சுராதீங்க!!

nathan