28.9 C
Chennai
Monday, May 20, 2024
1 16035 14238
மருத்துவ குறிப்பு

குழந்தைக்கு கருவிலேயே பாடம்… நல்வழிப்படுத்த உதவும் தியான் பேபி தெரபி!தெரிஞ்சிக்கங்க…

கருவில் இருக்கும்போதே குழந்தைக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா? `நிச்சயம் முடியும்’ என அடித்துச் சொல்கிறார் மனநல மருத்துவர் கல்யாணி. அதற்கு வழிகாட்டுகிறது அவருடைய `தியான் பேபி தெரபி’ என்கிற பெற்றோருக்கான கல்வி! நம் இதிகாசத்திலும், புராணத்திலும் கேட்ட விஷயம்தான். மகாபாரதத்தில், கருவில் இருக்கும் குழந்தை அபிமன்யூ `சக்கரவியூகம்’ பற்றிக் கேட்கிறான். அதை குருஷேத்திரப் போரில் பயன்படுத்துகிறான். தாயின் வயிற்றில் இருக்கும்போது, நாரதர் சொல்லச் சொல்ல `ஓம் நமோ நாராயணாய’ என்கிற மந்திரம் பிரகலாதனுக்குள் பதிந்துபோகிறது. பின்னாளில் சிறந்த விஷ்ணு பக்தனாக மாற அதுவே காரணமாகிறது. கதை என்கிற அளவில் சரி… யதார்த்தத்தில்?

தியான் பேபி

“நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே… என்கிற பாடல் சொல்வது உண்மையே. ஒரு குழந்தை ஞானி ஆவதும், நாட்டை ஆள்வதும் அம்மாவின் கைகளில்தான் இருக்கிறது. குழந்தையின் அறிவை கூர்மையாக்க உதவுவதற்குத்தான் `தியான் பேபி தெரபி’. நான் ஒரு மனநல மருத்துவராக என் பணியைத் தொடங்கிய ஆரம்பகாலத்தில் என்னிடம் நிறைய நோயாளிகள் வருவார்கள். அவர்களில் சிலர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கங்களுக்கும் ஆளாகியிருப்பார்கள். சிலருக்கு கவுன்சலிங் கொடுத்தாலே குணமாகிவிடும். சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், `பழக்கத்தை விட முடியவில்லை’ என்ற பதிலையே தருவார்கள். எனவே, `நல்ல விஷயங்களை, பழக்கங்களை சிறு வயதிலிருந்தே சொல்லிக் கொடுப்பதுதான் சிறந்தது’ என்கிற முடிவுக்கு வந்தேன். சில பள்ளிகளுக்கும் சென்றேன். அப்போதுதான் ஓர் உண்மை புரிந்தது, இதுவும் தாமதமான செயல் என்று. பள்ளியிலேயே சில மாணவர்களுக்கு தீய பழக்கங்களின் மேலான ஈடுபாடு வந்துவிட்டிருந்தது. அப்போதுதான் ஒரு மனிதன் உன்னதமானவனாக, சிறந்தவனாக வாழ்க்கையில் பிரகாசிக்க என்ன செய்யலாம் என யோசிக்கத் தொடங்கினேன். அதுதான் கருவிலேயே போதிக்கலாம் என்று என்னை திசை திருப்பி ஆராயவைத்தது. அதன் விளைவாக உருவானதுதான் ‘தியான் பேபி’ என்ற சிகிச்சை. கடந்த பதினைந்து வருடங்களாக இதை நடைமுறைப்படுத்தி வருகிறோம்” என்கிறார் கல்யாணி.

கல்யாணிஒரு பெண் கருவுற்ற நான்காம் மாதத்தில் தொடங்குகிறது இந்தச் சிகிச்சை. ஒன்பதாம் மாதம் வரை, ஒவ்வொரு மாதமும் தவறாமல் சிகிச்சைக்கு வர வேண்டும். சிகிச்சையும் மிக எளிதானதே! முதலில் டாக்டர் கல்யாணி, வந்திருக்கும் அத்தனைபேருக்கும் பொதுவான சில விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார். பிறகு, தம்பதியரை ஒவ்வொரு ஜோடியாக ஒரு தனி அறைக்கு அழைத்துப் போகிறார். இருள் சூழ்ந்திருக்கும் அறையில், பின்னணியில் மெல்லிய இசை ஒலிக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் அப்பாவையும் அம்மாவையும் பேசச் சொல்கிறார். அவரும் பேசுகிறார். நல்ல விஷயங்கள், லட்சியங்கள், ஆசைகள், கனவுகள், கதைகள்… என கருவிலிருக்கும் குழந்தையோடு ஆத்மார்த்தமாக விரிகிறது பேச்சு.

“கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டால், அவர்கள் இருவரின் பண்புகளும் மனநிலையும் ஆசைகளும் குழந்தைக்கும் வந்து சேரும். ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொருவிதமான தெரப்பி தருகிறோம். அது ஒவ்வொரு குழந்தையின் நரம்பு வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும். அரை மணி நேர பேச்சுக்குப் பிறகு அரை மணி நேரம் தியானம் போன்ற பயிற்சியையும் தருகிறோம்” என்கிற கல்யாணி, ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் சிகிச்சையின் தன்மைகளை விவரிக்கிறார்.

“நான்காம் மாதம்தான் குழந்தை ஓசைகளையெல்லாம் கேட்கத் தொடங்கியிருக்கும். முக்கியமாக தாய், தந்தையின் குரல்களை குழந்தையின் மனதில் பதியவைக்கவும், பிற நல்ல ஒலிகளைக் கேட்க வைப்பதுமே இந்த மாதத்தின் சிகிச்சை.

ஐந்தாம் மாதத்தில் குழந்தையின் இருதயம், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப்புகள் வளர்ச்சியடைய ஆரம்பித்திருக்கும். அந்த மாதத்தில் வழங்கப்படும் சிகிச்சை, உறுப்புகளின் முழுமையான வளர்ச்சிக்கு வித்திடும். எங்கள் தெரபியை எடுத்துக்கொள்ளாத குழந்தைகளும் முழுமையாகத்தான் பிறப்பார்கள். இருந்தாலும் எங்கள் சிகிச்சைக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் சக்திகளும் மனநலன்களும் மேம்பட்ட நிலையில் இருக்கும்

குழந்தை

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் போராடி, உச்சத்தை அடைவதில் உணர்வு உறுப்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த உணர்வுகளுக்கு உதவும் உறுப்புகளுக்குப் பயன் தரும் வகையில் செய்யப்படுவதே ஆறாம் மாத தெரபி. அதாவது, இது குழந்தையின் ஐ.க்யூ (Intelligence Quotient) வளர்வதற்கான காலகட்டம் என்பதால், எப்படி நம் குழந்தையை மேம்பட்டவளாக / மேம்பட்டவனாக வளர்க்கப் போகிறோம் என்பதற்கான தெரபி இந்த மாதத்தில் செய்யப்படும்.

ஐ.க்யூ-வைத் தொடர்ந்து இ.க்யூ (Emotional Quotient) விரிவடைய வாய்ப்புக் கொடுப்பது குழந்தை கருவில் இருக்கும் ஏழாம் மாதம். எந்த இடத்தில், எப்படிச் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையும் குணமும்கொண்டவர்கள் மிகவும் குறைவு. மேலும் குழந்தை, தான் எதிர்காலத்தில் எந்தத் துறைக்குச் செல்லப் போகிறோம் என்பதையும் இந்தக் காலகட்டத்தில்தான் கனவுகளாகக் காண ஆரம்பிக்கும். அதற்கு உதவுவதற்காகச் செய்யப்படுவது ஏழாம் மாத சிகிச்சை.

எட்டாம் மாதத்தில் செய்யப்படும் தெரபி, குழந்தையின் எஸ்.க்யூ (Spiritual Quotient) மேன்மையடையச் செய்யப்படுவது. ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்களையும் செயலாகச் செய்யத் தூண்டுவது இந்த சிகிச்சை

ஒன்பதாம் மாதத்தில் அனைத்துவிதமான பயங்களும் குழந்தைக்குத் தொற்றிக்கொள்ளும் காலம். குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய்க்கும், வெளி உலகத்துக்கு வரவிருக்கும் சிசுவுக்கு உத்வேகமும் கொடுப்பது இந்த சிகிச்சை. தாய், சேய் இருவரையும் மனதளவில் உறுதியாக்குவதே இதன் நோக்கம்.

`தியான் பேபி’ தெரபி மூலம் பிறந்த குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். மற்ற குழந்தைகளைவிட ஒரு படி உயர்ந்து இருக்கின்றனர் என்பதே இதன் அறிவுபூர்வமான ஆராய்ச்சியின் முடிவு” என்கிறார் மருத்துவர் கல்யாணி.

சிகிச்சைக்கான கட்டணம் மிகக் குறைவு. அதோடு, கருவிலிருக்கும் குழந்தை, அம்மாவின் இதயத் துடிப்பை, குரலை, நல்ல இசையைக் கேட்பது பிற்காலத்தில் குழந்தைக்கு நல்ல பலன்களைத் தரும் என்பது அறிவியல்பூர்வமாக அறியப்பட்ட உண்மை. அதேபோல, ஒரு மந்திரத்தை அல்லது கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பதும் குழந்தையின் கவனித்தல் திறனை, கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும் என்பதும் உண்மையே. குழந்தைக்கும் தாய்க்குமான தொப்புள்கொடி உறவு கருவிலேயே பலம் பெற்றால் நல்லதுதானே!1 16035 14238

Related posts

10 நாட்களில் தேமல் முற்றாக மறைந்துவிட இத செய்யுங்கள்!…

sangika

பொருளாதார விஷயத்தில் உதவ வேண்டியது பிள்ளைகளின் கடமை

nathan

சிசேரியனுக்கு பிறகு சுகப்பிரசவம் நிஜமாவே சாத்தியமா? பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

ஆமணக்கு எண்ணெய்யில் உள்ள அற்புத பயன்கள்….!

nathan

பெண்ணாக இருப்பதன் ஆனந்தங்களும் அவஸ்தைகளும்

nathan

குழந்தைகளுக்கு சமூக வலைத்தளங்களில் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

nathan

எண் 6 (6,15,24) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அதிகம் பகிருங்கள்

nathan

ஐந்தே நிமிடங்களில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? – இந்த சைனீஸ் மசாஜ் போதும்!

nathan