மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை உள்ளடக்கிய ஆயுஷ் துறை வல்லுநர்களுடன் பிரதமர் மோடி கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனாவுக்கு ஆதார அடிப்படையில் மருந்து கண்டறியும் முயற்சியில் ஆயுஷ் துறை மருத்துவர்கள் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மூத்த சித்த மருத்துவரும், பேராசிரியருமான ஜெய்ப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சல், இருமல், மூச்சுவிட சிரமப்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் கபசுரக் குடிநீரை சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
கபசுரக் குடிநீர் தான் கொரோனாவுக்கு மருந்து என யாரும் எண்ண வேண்டாம் என்றும், ஆனால் அதே வேளையில் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கபசுரக் குடிநீர் பெரும்பங்காற்றும் எனவும் சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். சுக்கு, திப்பிலி, இலவங்கம், ஆடாதொடை இலை, சீந்தில், சிறுதேக்கு, வட்டத்திருப்பி வேர், கோரைக்கிழங்கு, நிலவேம்பு, கற்பூரவல்லி இலை, கடுக்காய் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பாரம்பரிய மூலிகை பொருட்களை ஒன்றாக சேர்த்து கபசுர குடிநீருக்கான சூரணம் தயார் செய்யப்படுகிறது