மருத்துவ குறிப்பு

கண் கோளாறுகளை போக்கும் மருத்துவம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பக்கவிளைவில்லாத பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கண்கள் சிவந்த நிலை, கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைகளுக்கு செம்பருத்தி, வில்வ இலை, கருவேலம் இலை, அகத்தி பூ ஆகியவை மருந்துகளாகிறது.
அதிக நேரம் கண்விழித்து இருப்பது, தூக்கமின்மை, கணினியை நீண்டநேரம் பார்ப்பது, தொற்று கிருமிகள், புற ஊதா கதிர்களின் தாக்கம் போன்றவற்றால் கண்களில் சிவப்பு, எரிச்சல் ஏற்படுகிறது. செம்பருத்தி பூவை பயன்படுத்தி கண் சிவப்பு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: செம்பருத்தி பூ, பனங்கற்கண்டு, பால்.

செய்முறை: 2 செம்பருத்தி பூவின் இதழ்களை சுத்தப்படுத்தி எடுக்கவும். இதனுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர கண்களில் ஏற்படும் எரிச்சல், சிவந்த தன்மை மாறும். அழற்சி, தொற்று விலகும். பல்வேறு நன்மைகளை கொண்ட செம்பருத்தி பூ கண்நோய்களுக்கு அற்புத மருந்தாகிறது. இதய நோய்களை போக்குகிறது. புண்களை ஆற்றும் தன்மை உடையது. புற்றுநோய் வராமல் தடுக்கும். வில்வ இலையை பயன்படுத்தி கண்நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். வில்வ இலைகளை சுத்தப்படுத்தி பாத்திரத்தில் போட்டு லேசாக வதக்கவும். இதை ஆறவைத்து இளம் சூட்டுடன் கண்களை மூடிக்கொண்டு இலைகளை அரைமணி நேரம் துணியால் கட்டி வைத்து எடுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கண்களை கழுவினால் சிவப்புதன்மை மறையும். கண்வீக்கம் சரியாகும்.

கண்நோய்களை போக்கும் அற்புத மருந்தாக வில்வம் விளங்குகிறது. இது, வீக்கத்தை கரைக்க கூடிய தன்மை கொண்டது. நோய்களை விலக்க கூடியது. ரத்தத்தை கட்டுப்படுத்தும். கண்களில் ஏற்படும் எரிச்சல், ரத்தக்கசிவை குணமாக்கும்.
அகத்தி பூக்களை பயன்படுத்தி கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அகத்தி பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து நீர்விட்டு சுத்தப்படுத்தவும். இதனுடன் கருவேலம் இலைகளை சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களின் சிவப்பு தன்மை மாறும். கண்களில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். பார்வை தெளிவுபெறும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அகத்தி கண்நோய்களை குணப்படுத்தும். மாதம் ஒருமுறையேனும் அகத்தி கீரை சாப்பிட்டுவருவது நல்லது. அகத்தி பூ நோய் கிருமிகளை போக்கும் தன்மை உடையது. வீக்கம், வலியை சரிசெய்யும். இயற்கையாக கிடைக்கும் செம்பருத்தி, வில்வம் போன்ற மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் கண்கோளாறுகள் விரைவில் குணமாகும் என்பதில் ஐயமில்லை. விக்கலை நிறுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு கடுகு அற்புத மருந்தாகிறது. கடுகை அரைத்து மெல்லிய துணியில் தடவி தொண்டை குழியின் மேல் சிறிது நேரம் பற்றாக போடுவதன் மூலம் விக்கல் உடனடியாக நின்றுபோகும்.
htapp14321

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button