கர்ப்பிணி பெண்களுக்கு

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்

போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும்.

பெண்கள் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட்டால் குழந்தைகளில் பிறவி கோளாறை தடுக்கலாம்
நிச்சயதார்த்த மாத்திரை என்ற பெயரைக் கேட்டதும், பலரும் இது ஆண்மை பற்றிய விவகாரம் என்று நினைக்கலாம். ஆனால், இது பெண்களுக்கான விஷயம். பெண்களுக்கு மட்டுமல்ல, வருங்கால சந்ததிகளை ஆரோக்கியமாக உருவாக்கும் அவசியமான ஒன்று. நமது நாட்டில் பிறக்கும் குழந்தைகளில் 3 சதவீதம் பேர், பிறவிக் கோளாறுடன் பிறக்கின்றனர்.

இதனால் மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, மூளையில் நீர்க்கோர்ப்பது, குடல் வெளியில் தள்ளி இருப்பது, சிறுநீரகங்கள் இல்லாமல் பிறப்பது, கை-கால் எலும்புகள் வளராமல் இருப்பது போன்ற குறைகள் குழந்தைகளுக்கு இருக்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் நீண்ட நாள் உயிர்வாழ முடியாது. இந்த குறைகளில், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற அதிநவீன மருத்துவக் கருவிகள் 70 சதவீத குறைகளை மட்டுமே கண்டுபிடிக்க உதவுகின்றன. மீதி 30 சதவீத குறைகளை கண்டு பிடிக்கவே முடியாது. அதிலும் காது கேளாமல் இருப்பது போன்ற பிறவிக் கோளாறுகள் குழந்தைகள் வளர வளரத்தான் தெரிய வரும். ஸ்கேன் மூலம் உயிர் பாதிப்பு பிரச்சினைகளை மட்டும் தான் கண்டுகொள்ள முடியும் என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, பிறவிக் கோளாறு ஏற்படுவதற்கு, மரபு ரீதியான, சுற்றுச்சூழல் காரணங்களை மருத்துவம் சொன்னாலும், மனக் கோளாறு, முதுகுத் தண்டு பிரச்சினைகளுடன் பிறக்கும் குழந்தைகள்தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. மேலும் இந்த குறைபாடுடன் குழந்தைகள் பிறக்க, போலிக் ஆசிட் குறைவு தான் காரணம். ஆனால், இந்தப் பிறவிக் கோளாறை பெண்கள் நினைத்தால், தங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்க முடியும் என்கிறது, மருத்துவம்.

மிகக் குறைவான விலையில் கிடைக்கும் போலிக் ஆசிட் மாத்திரைகளை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே பிறவிக் கோளாறுடன் பிறக்கும் குழந்தைகளை 60 சதவீதம் தவிர்க்க முடியும். இந்தியா தவிர உலகம் முழுவதும் பெண்கள் இந்த மாத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள். நமது நாட்டில் கூட பருவமடைந்த வளரிளம் பெண்களுக்கு அரசுப் பள்ளிகளில் இரும்புச் சத்து மாத்திரையுடன் சேர்த்து, போலிக் ஆசிட் மாத்திரையும் இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால், பெண்களுக்கு திருமணம் என்பது 20 வயதுக்கு மேல் தானே நடக்கிறது.

கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு போலிக் ஆசிட் மாத்திரையை மருத்துவர்கள் கொடுப்பார்கள். ஆனால், அதற்கு முன்பு கர்ப்பத்திற்கு தயாராகும் போதே பெண்ணின் உடலில் போலிக் ஆசிட் போதுமான அளவு இருந்தால், பிறவிக் கோளாறுடன் குழந்தை பிறப்பதை தவிர்க்க முடியும். வெளிநாட்டுப் பெண்கள் திருமணத்துக்கு தயாராகும் போதே போலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் வெளிநாட்டினர் இந்த மாத்திரைக்கு ‘என்கேஜ்மெண்ட் பில்’ என்ற பெயரை வைத்தார்கள்.

நமது நாட்டிலும் பெண்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நாளில் இருந்து போலிக் ஆசிட் என்ற இந்த நிச்சயதார்த்த மாத்திரையை தொடர்ந்து கொடுத்து வந்தால், பிறவிக்கோளாறு இல்லாத ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்க முடியும். கரு உருப்பெறும் போதே, போதிய அளவு போலிக் ஆசிட் பெண்ணின் உடலில் இருக்க வேண்டும் என்பதை மருத்துவர்களின் ஆலோசனையோடு, ஆண்களும் தங்கள் மனைவிமார்களுக்கு சொல்லி சாப்பிட வைப்பது, பின்னாளில் ஏற்படும் பல பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்.
201612050959568149 folic acid tablets eat pregnant women SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button