இந்தியாவின் இரண்டு இராணுவ விமானங்களை, சீனத் தயாரிப்பு போர் விமானம் ஒன்றைக் கொண்டு பாகிஸ்தான் அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி இருந்தது.
இதன்போது இந்தியாவின் இரண்டு போர் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவித்தது. அதில் ஃப்ரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானம் ஒன்றும் அடங்கும்.
இந்த விமானங்கள் இரண்டையும் சீனாவின் தயாரிப்பில் பாகிஸ்தான் கொள்வனவு செய்த போர் விமானம் ஒன்றைக் கொண்டே பாகிஸ்தான் வீழ்த்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இது தொடர்பாக இந்தியாவின் விமானப்படை அதிகாரிகள் யாரும் பதில் வழங்கவில்லை என்றும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பிராந்தியம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் நேற்றிரவு வான் தாக்குதலை நடத்த முற்பட்டதாகவும், அந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து இந்தியாவும் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.