28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
p68a
ஆரோக்கியம் குறிப்புகள்

தூக்கம்… அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்!

தூக்கம்… அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்!
உறக்கம்

‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…

அமைதி உன் நெஞ்சினில் நிலவட்டுமே…’

– கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. தூக்கம் மனிதனுக்கு அவசியமான ஒன்று. இரவுப் பொழுதுகளில் தூக்கம் இயல்பாக வர வேண்டும். வராவிட்டால் உடம்பில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம். அதேவேளை, இரவிலும் தூங்கி, பகலிலும் தூங்கினால் அதுவும் பிரச்னைதான். பொதுவாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும்.

தூக்கமின்மை… காரணங்களும் தீர்வுகளும்!
p68a
ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வாயுக்கோளாறுகள் இருந்தால் பெரும்பாலும் தூக்கம் வராது. வாயுக்கோளாறு முற்றிய நிலையில் மாரடைப்பு போன்றே நெஞ்சை அழுத்துவது, தலையைச் சுற்றுவது என பாடாய்ப்படுத்தி விடும். வாயுக்கோளாறை சரிசெய்ய காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என ஒவ்வொரு பொழுதுக்கும் ஒன்றை சாப்பிட்டு வரலாம். காலையில் இஞ்சி எனும்போது, வெறுமனே இஞ்சிச் சாறு குடிக்கலாம் அல்லது இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம். கடும்பகல் சுக்கு எனும்போது சுக்கு, மிளகு, தனியா போன்றவற்றைப் பொடித்து தயாரித்த சுக்கு காபி குடிக்கலாம். மாலையில் கடுக்காய் எனும்போது, இரவில் உறங்கச் செல்லும் முன் கடுக்காய் கஷாயம் குடிக்கலாம். வாயுக்கோளாறை சரிசெய்வதில் பிரண்டை ஓர் அற்புதமான மருந்து. பிரண்டையை நார் உரித்து, நல்லெண்ணெயில் வதக்கி புளி, காய்ந்த மிளகாய், உப்பு, தேவைப்பட்டால் உளுந்து, தேங்காய் சேர்த்து வதக்கி அரைத்து துவையலாகச் சாப்பிடலாம்.

சின்ன வெங்காயமும் தூக்கத்தை கண்களில் கொண்டுவந்து தவழவைக்கவல்லது. சின்ன வெங்காயத்தை உப்பு சேர்த்து வேகவைத்து இரவு 8 மணி அளவில் சாப்பிட்டால்… நேரத்துக்கு தூக்கம் வந்து சேரும். சீரகத்தை வறுத்துப் பொடி செய்து வாழைப்பழத்துடன் சேர்த்துச் சாப்பிட்டால் தூக்கம் வரும். தலையணையில் மருதாணிப்பூக்களை வைத்து தூங்கினால் ஆழ்ந்த நித்திரை கிடைக்கும்.

அதீத தூக்கம் எதனால்?!

தூக்கம் வராமல் தவிப்பவர்கள் ஒருபுறமிருக்க, நேரம் காலம் இல்லாமல் தூக்கி வழிபவர்களும் இருக்கிறார்கள். இயற்கையாகவோ, நோயின் காரணமாகவோ, ஒவ்வொருவரின் உள்ளம் சார்ந்தோ, உடல் சார்ந்தோ அதிக தூக்கம் வரலாம். கபம் அதிகமாக இருந்தாலும் தூக்கம் வரலாம்.

பொதுவாக உண்ணும் உணவைப் பொறுத்தே பெரும்பாலானோருக்கு பகல் தூக்கம் வருகிறது. உண்ட மயக்கம் தொண்டனுக்கும் என்பார்கள். உணவு உண்ட பின், அது செரிமானமாகத் தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப் பகுதிக்கு அதிகளவில் ரத்தம் பாயும். இதனால் மூளை மற்றும் உடம்பின் பிற பகுதிகளுக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையத் தொடங்கும். விளைவாக, உடம்பு சோர்வடைந்து ஒருவித மயக்கம் உண்டாகும். பெரும்பாலானோர் செரிமானக் குறைபாடு இருந்தால், அதை சரிசெய்யாமல் மேலும் மேலும் உணவு உண்ணும்போது கூடுதலாக ரத்தம் தேவைப்படுவதால் மயக்கமும் அதைத் தொடர்ந்து தூக்கமும் ஏற்படுகிறது.

உணவுப் பழக்கத்தைப் பொறுத்தவரை, பயறு மற்றும் பருப்பு வகை உணவுகள், கிழங்கு வகை உணவுகள், பால், நெய், வெண்ணெய், கொழுப்பு நிறைந்த இறைச்சி உணவுகள் மற்றும் உணவு உண்ட பிறகு இனிப்புகள், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களாலும் தூக்கம் வர அதிக வாய்ப்புள்ளது. குண்டான உடல்வாகு உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என இவர்களுக்கெல்லாம் தூக்கம் பகலிலும் அழுத்தும். ஆக, தூக்கம் வருவதன் காரணத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

என்ன உணவு உண்கிறோம், அது தரும் சத்து, தீர்க்கும் பிரச்னைகள் என்ன என்பதையெல்லாம் அறிந்து உண்பது நல்லது. இவை எல்லாவற்றுக்கும் மேல், சாப்பிடும் உணவுக்கேற்ற உடல் உழைப்பு மிக அவசியமான ஒன்று!

எம்.மரிய பெல்சின்

உண்ணும் உணவை முறைப்படுத்துங்கள்!

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களும் சரி, பகலிலும் தூங்கி விழுபவர்களும் சரி… பொதுவாக அனைவருமே காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை உண்ணும் உணவை முறைப்படுத்திக் கொள்ளவது நல்லது.

இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்லாது அனைவருமே காலையில் எழுந்ததும் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு, தேவைப்பட்டால் தேன் அல்லது சர்க்கரை கலந்து சாப்பிடலாம். இது கழிவுகளை அகற்றுவதில் முக்கிய பங்காற்றும். எலுமிச்சைச் சாறு அருந்திய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நெல்லிக்காய் சாப்பிடலாம்.

காலை உணவாக பப்பாளிப்பழம் சாப்பிடுவது சிறந்தது. பசி எடுத்தால் அடுத்த ஒரு மணி நேரம் கழித்து புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை போன்றவற்றில் தயாரிக்கப்பட்ட சட்னியை இணை உணவாகக்கொண்டு இட்லி, இடியாப்பம், தோசை போன்றவற்றைச் சாப்பிடலாம்.

காலை 11 மணி வாக்கில் தேநீருக்குப் பதில் பால் கலக்காத தேநீர், லெமன் டீ அல்லது கீரை, காய்கறி சூப், கொத்தமல்லித்தழை – இஞ்சி சேர்த்து தயாரித்த மோர் என அருந்தலாம்.

மதிய உணவு எதுவாக இருந்தாலும் அதனுடன் ஒரு கீரை மற்றும் ரசம் சேர்த்துக்கொள்வது நல்லது. லன்ச் கொஞ்சம் ஹெவியாக இருந்தால் வெற்றிலை போட்டுக்கொள்ளலாம்.

மாலையில் சுக்கு காபி நல்லது. ஆவாரம்பூ தேநீரும் அருந்தலாம்.

இரவு 8 மணிக்குள் உணவை முடித்து, ஒரு மணி நேரம் கழித்து உறங்கச் செல்வது மிக நல்லது. மலச்சிக்கல், செரிமானக்கோளாறு இருந்தால் இரவு தூங்கச் செல்வதற்கு முன் கடுக்காய் கஷாயம் குடிக்கலாம். தவிர, காலையில் துளசி, சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், நன்னாரி, சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி, பனங்கல்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்த துளசி தேநீரும் அருந்தலாம்.

Related posts

இவளோ பயன் இருக்கா! இதை படிங்க இனி இளநீர் தா குடிப்பிங்க பாருங்க,

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி, இறுமலை நீக்க சிறந்த கசாயம் இது தான்..

nathan

உங்க கண்களை பாதுகாக்கனும்னா இந்த லைட்டை மட்டும் போடாதீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா பிரியாணி இலைல டீ போட்டு குடிச்சா கடகடன்னு வெயிட் குறையுதாம்..

nathan

உங்களிடம் இருக்கும் இந்த பழக்கம் உங்கள் திருமணத்திற்கு எதிரி என்பது உங்களுக்கு தெரியுமா?

nathan

குழந்தைகள் சிறுவயது முதலே உயரமாக வளர இந்த உணவுகளை கொடுத்தால் போதுமாம் ?

nathan

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

nathan

பெற்றோர்களே தெரிஞ்சிக்கங்க…கோபமாக இருக்கும் போது பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லக்கூடாதவைகள்!

nathan

உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருந்தா…ஷாக் ஆகாதீங்க…

nathan