27.1 C
Chennai
Saturday, May 24, 2025
202005091132388771 Tamil News Who can drink Kabasura drinking water and Nilavembu Kashayam
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்? என்பது குறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தனம் விளக்கியுள்ளார்.

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயத்தை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்?
நிலவேம்பு கசாயம்
கோவை:

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்தநிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீரை பொதுமக்கள் குடிக்கலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீருக்கு அமோக வரவேற்பு பெற்று உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலர் நாட்டு மருந்துகடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் மூலிகைகளை வாங்கி, கசாயமாக வீட்டிலேயே தயாரிக்க நினைக்கிறார்கள். ஆனால் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை தயாரிக்கும் முறை மற்றும் யார் யாருக்கு எவ்வளவு? குடிக்க வேண்டும் என்பது குறித்து தெரியாமல் தவிக்கிறார்கள்.

இவர்களின் தவிப்பை போக்கும் வகையில் நிலவேம்பு மற்றும் கபசுர குடிநீரை யார் யார் எவ்வளவு குடிக்கலாம்? எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்து கோவை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் தனம் கூறியதாவது:-

கபம் என்றால் சளி. சுரம் என்றால் காய்ச்சல். அதாவது சளி, காய்ச்சலை அகற்றுவதுதான் கபசுர குடிநீர் என்பதாகும். இந்த கபசுரத்தில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கரகாரம், முள்ளிவேர், கடுக்காய்த்தோல், ஆடாதொடா இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் கொடி, சிறு தேக்கு, நிலவேம்புக்சமூலம், வட்டத்திருப்பி வேர் (பாடக்கிழங்கு), முத்தக்காசு (கோரைக்கிழங்கு) ஆகிய 15 வகையான அரிய வகை மூலிகைகளை கொண்டு சித்த மருத்துவ முறைப்படி கபசுர குடிநீர் தயாரிக்கப்படுகிறது.

கபசுர குடிநீர் தயாரிக்கும் முறையானது முதலில் கபசுர குடிநீர் சூரணத்தை ஒரு தேக்கரண்டி (5 கிராம்) வீதம் எடுத்துக்கொண்டு 200 மில்லி அளவு தண்ணீரில் இந்த குடிநீர் சூரணத்தை போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் நான்கில் ஒரு பங்காக வரும் வரை (அதாவது 50 மில்லி) காய்ச்சி வடிகட்ட வேண்டும். வடிகட்டிய கசாயத்தை தினமும் 2 அல்லது 3 வேளைகள் குடிக்கலாம்.

இந்த கபசுர குடிநீரை 1 முதல் 5 வயது வரை உள்ளவர்கள் 5 மில்லி, 5 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மில்லி, 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 50 மில்லி வரை மட்டுமே குடிக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் பருகினால் நல்லது. ஏதேனும் நோய் இருந்தால் டாக்டரின் ஆலோசனைப்படி உணவு உண்ணுவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ அருந்தலாம். வாரத்துக்கு 3 நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிக்கலாம். மேலும் சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனைப்படி பயன்படுத்தவேண்டும்.

குடிநீரை அப்போதைக்கு அப்போது மட்டும் புதிதாக செய்து பயன்படுத்தவேண்டும். குடிநீரை 3 மணி நேரத்துக்கு பின் பயன்படுத்தக்கூடாது. 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், டைபாய்டு காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் குடிக்க கூடாது. அத்துடன் கர்ப்பிணிகள் முதல் 3 மாதங்களுக்கு குடிக்காமல் இருப்பது நல்லது. வயிற்றில் புண் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. நாள்பட்ட நோய் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே குடிக்கவேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குடிநீர்தான் இந்த கபசுர குடிநீராகும். எனவே இந்த கபசுர குடிநீரை மேற்கண்ட முறைகளை பின்பற்றி குடிக்கலாம்.

நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் முறை?

நிலவேம்பு குடிநீர் பருகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும். நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பை மட்டும் காய்ச்சி குடிப்பதல்ல. நிலவேம்பு, மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், விலாமிச்சைவேர், சந்தனம், பற்படாகம், பேய்ப்புடல் ஆகிய 9 மூலிகைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கப்பட்ட பொடி தான் நிலவேம்பு கசாயம் என அழைக்கப்படுகிறது.

2 தேக்கரண்டி நிலவேம்பு பொடியை 400 மில்லி தண்ணீரில் கலந்து 150 மில்லி அளவுக்கு சுண்ட காய்ச்சி காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லி அளவும், 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு 5 மில்லியும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 30 முதல் 40 மில்லி வழங்க வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் குடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

உங்களுக்கு பல் கூசுதா? ரத்தம் வருதா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

தாயின் கருவறைக்குள் குழந்தைகள் ஏன் உதைக்கிறார்கள்?

nathan

குறைந்து வரும் பெண்கள்:திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் திண்டாடும் மாப்பிள்ளைகள்

nathan

கருத்தரிப்பதற்கு முன் கணவன், மனைவி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள்!!!

nathan

நீர்க்கட்டிகள் நோய் அல்ல!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மார்பக புற்றுநோய் ஏற்பட இதுவும் முக்கிய காரணம்

nathan

பெண்களே கோபத்தால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

சூப்பர் டிப்ஸ்! காயங்கள் சீழ்கட்டி பெரிதாகாமல் இருக்க வீட்டிலிருக்கும் இந்த எளிய பொருட்களே போதும்….

nathan

ஐவிஎப் சிசிச்சைக்குச் செல்லும் அனைவருக்கும் குழந்தைப் பிறக்குமா?

nathan