31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும்

`என்ன… ஏதாவது விசேஷமா?’ பின்னே… திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தை..? இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா? கோயில், விழாக்கள் என எங்கே அந்தப் பெண் போனாலும், இந்தக் கேள்விகளிலிருந்து அவள் தப்ப முடியாது. கருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்படும். சில ஆண்டுகள் கடந்தும் குழந்தை பிறக்கவில்லையா? அவ்வளவுதான். பைசா செலவில்லாமல், எந்த வஞ்சனையும் வைக்காமல், ஒரு `சிறப்புப் பட்ட’த்தைக் கொடுத்துவிடுவார்கள். அந்தப் பெண் நாத்தனார், மாமியார், அக்கம் பக்கத்தார் மட்டுமன்றி தாலிகட்டிய கணவனாலும் இழிவாக விமர்சிக்கப்படுவார்.

 

அண்மையில் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் இதற்கு மிகப் பெரும் உதாரணம். “என்னை ஆண்மையில்லாதவன் என்று சொன்னதால் அவளைக் கொன்றேன்’’ என்று மனைவியைக் கொலை செய்ததற்கான காரணத்தை வாக்குமூலமாக அளித்திருக்கிறார் ஒரு கணவர்.குழந்தையின்மைப் பிரச்னையில் பெண்ணிடம் குறை இருந்தாலும், ஆணிடம் குறை இருந்தாலும் ஒட்டுமொத்தமாகப் பெண்களின் மீதே பழி விழுகின்றன. இதற்கெல்லாம் காரணம், குழந்தையின்மை என்பது குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறி நிற்பதுதான், அந்த அளவுக்குத் தீர்க்க முடியாததா குழந்தையின்மை பிரச்னை… இதை எப்படிச் சரிசெய்வது?

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத்திடம் பேசினோம்…

“பிளாஸ்டிக்கிலிருந்து வெளியேறும் நச்சுகள், உணவுப் பழக்கவழக்கங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த காய், கனிகளைச் சாப்பிடுவது, போதைப் பொருள்களை அதிகமாக உட்கொள்வது போன்றவையே குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்கள். அதேநேரத்தில் இது தீர்க்கக்கூடிய ஒரு பிரச்னைதான். குழந்தையின்மைக்காகப் பெண்களைத் துன்புறுத்துவது போன்ற அவலங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன. குழந்தையின்மை என்றாலே `அது பெண்களுக்கு ஏற்படும் ஒரு குறைபாடு’ என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். இதற்கு அறியாமைதான் முதல் காரணம்.

 

ஆண், பெண் இருவருக்குமே குறைபாடு இருக்க வாய்ப்புண்டு. முதலில், தம்பதியரில் யாருக்குக் குறைபாடு என்பதைக் கண்டறிய வேண்டும். இதைக் கண்டறிய மருத்துவத்தில் இப்போது பல நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. குறைகளைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகச் சரிசெய்துவிடலாம். ஆனால், அதற்கு ஆகும் செலவு அதிகமென்பதால் பலரால் இந்த பரிசோதனைகளுக்கும் சிகிச்சைகளுக்கும் போக முடியாமல் போய்விடுகிறது. இதை அரசு கருத்தில்கொள்ள வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இலவசக் கருத்தரிப்பு மையங்களை (Fertility centre) ஏற்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகளுக்கும் இதை விரிவுப்படுத்தலாம்.

இன்றளவில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படும் பிரச்னையாகக் குழந்தையின்மை இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான பெரிய முன்னெடுப்புகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேபோல குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பான விழிப்புஉணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அரசாங்கக் காப்பீட்டுத் திட்டத்தில் இதையும் சேர்க்க வேண்டும்’’ என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத்.

“குழந்தையின்மைப் பிரச்னை இப்போது பரவலாகக் காணப்படுகிறது என்பது உண்மைதான். ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடும், பெண்களுக்கு உடல்பருமன் பிரச்னையுமே இதற்கான முக்கியக் காரணங்கள். உடலுழைப்பின்மை, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்காமல் இருப்பதுதான் உடல் பருமன் ஏற்படக் காரணம். எனவே, சிறுவயதிலிருந்தே போதிய உடற்பயிற்சிகள், நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாகப் பெண்களுக்கு பி.சி.ஓ.டி (Polycystic Ovarian Disease) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டியும் குழந்தையின்மைக்கு ஒரு காரணம். வாழ்வியல் மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் சினைப்பை நீர்க்கட்டி ஏற்படுகிறது.

 

அதிக மனஅழுத்தம், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். வலியுடன்கூடிய மாதவிடாய், தாமதமாக மாதவிடாய் வருவது போன்றவற்றுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 21 வயதுக்கு மேல், அதிகபட்சம் 30, 35 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். தைராய்டு பிரச்னை இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே தைராய்டு பிரச்னைக்கான சிகிச்சைகளை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கருத்தரித்தலில் பிரச்னை இருந்தால், மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிடலாம். இது சரிசெய்யக்கூடிய ஒரு பிரச்னைதான்’’ என்கிறார் மகப்பேறு மற்றும் மகளிர்நல மருத்துவர் ஶ்ரீகலா.

ஆண்களுக்கு எதனால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது… தவிர்ப்பது எப்படி? விளக்குகிறார் சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர்…

“மனஅழுத்தம், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல்சூடு மற்றும் மரபணுரீதியான பிரச்னைகள் ஆகியவையே ஆண்மைக்குறைபாட்டுக்குக் காரணங்கள். இவை தவிர, சிறுவயதிலிருந்தே இரண்டு விதைகளும் போதிய வளர்ச்சியில்லாமல் இருப்பது, விந்தணுக்கள் வரும் குழாய்களில் ஏற்படும் அடைப்பு போன்றவையும் காரணங்களாக இருக்கின்றன.

அதிக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். உறவினர்களுக்குள் திருமணம் செய்துகொள்வதும் குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. சில ஆண்களுக்கு விந்தணுக்களில் போதிய ஆற்றலில்லாமல் இருக்கும். குழந்தையின்மைப் பிரச்னை எந்தக் காரணத்தால் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கான சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால் சரிசெய்துவிட முடியும்.”

Related posts

பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்

nathan

தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்….

sangika

பெண்கள் தொப்பை குறைப்பது எப்படி?

nathan

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

குறைமாத குழந்தைகள் ஏன் பிறக்கின்றன?

nathan

உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள்

nathan

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

sangika

தாய்மையை தடுக்கும் உணவுகள்! கவனம் தேவை

nathan

இந்த பயிற்சியை செய்து வருபவருக்கு வயாகரா போன்ற மருந்து தேவைப்படாது…

nathan