ஆவேச பேட்டி..!தமிழர்களை பிச்சைக்காரர்கள் என்ற தயாநிதிமாறன்.. பிரதமர், முதல்வரும் பிச்சை எடுக்குறாங்க..

பிச்சை எடுக்கும் மக்களிடம் பிச்சை கேட்கும் ஒரே அரசு இந்திய அரசுதான் என திமுக நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதிமாறன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தர்ப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், திமுக சார்பில்  ஏழை எளிய மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பை தயாநிதி மாறன் விநியோகித்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அமெரிக்கா அரசாக இருந்தாலும் சரி ஒரு ஏழை நாடாக இருந்தாலும் சரி. தன்னுடைய மக்களுக்கு தேவயைான பொருள் உதவிகளை மற்றும் பண உதவிகளை தருவது. ஆனால், இந்தியாவில் தான் பிரதமரும், முதல்வரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கின்றனர். ஏற்கனவே மக்களே பிச்சை எடுக்கின்றனர். பிச்சை எடுக்கும் மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு நம் இந்திய அரசு தான்.

 

ஜனநாயக நாட்டில் எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கடமை முதல்வருக்கு உண்டு. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. கொரோனா வைரஸ் குறித்து தமிழக அரசு முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்து விளம்பரம் தேடுகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை கைவிட்டுவிட்டு, அதனை இலவசமாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியியை எடுத்துக் கொண்டார்கள். மருத்துவ உபரணங்கள் கூட விநியோகிக்க இப்போது உறுப்பினர்களால் முடியாது. ஆனால், பிக்பாஸ் நடுவர் போல பிரதமர் ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அவர் சொல்வதை எல்லாம் சங்கியும், மங்கியும் செய்து கொண்டிருக்கின்றனர். அறிவிப்புகள் பெரிதாக இருக்கிறது. ஆனால், நடைமுறை பூஜ்யம்தான். டிரம்ப் இந்தியா வந்த போதே இந்தியாவில் நோய் உச்சத்தில் இருந்தது. டிரம்ப் வரவேற்பதற்காக காட்டிய வேகத்தை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காட்டி இருக்கலாம்.

 

மேலும், மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைப்பதற்காக கொரோனா நோயை மறைத்து விட்டது மத்திய அரசு. அதற்குத்தான் இப்போது பிரதமர் மன்னிப்பு கேட்கிறார் போல என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் திமுக எம்.பி.  தயாநிதிமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.