அழகு குறிப்புகள்

குழந்தைக்கான உணவூட்டல் தொடர்பான அறிவு கட்டாயம் அனைவருக்கும் வேண்டியதே…

பத்து மாதங்கள் கருவில் சுமந்த உயிர் கைக்கு வந்த பின்னர், அம்மாவுக்கும் குழந்தைக்குமான பந்தத்தை வலுவாக்குவதிலும், குழந்தையின் ஆரோக்கியத்திலும் தாய்ப்பாலின் முக்கியத்துவம் இன்றியமையாதது.

அரசு நிறுவனங்கள் முதல் தனியார் நிறுவனங்கள்வரை இன்று பெண் ஊழியர்களுக்கு ஆறு மாதங்கள் மகப்பேறு விடுப்பு அளிப்பது, அவர்களுக்கான மகத்தான பரிசு.

அதற்குப் பின்னர் பணிக்குத் திரும்பவேண்டிய சூழலில், பல அம்மாக்களால் குழந்தைகளுக்குச் சரிவர தாய்ப்பால் ஊட்ட முடியாமல் போகிறது அல்லது தாய்ப்பால் கொடுப்பதையே நிறுத்திவிடுகிறார்கள்.

eating baby food

ஒரு வயதுவரை குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டவேண்டியது அவசியம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, வேலைக்குச் செல்லும் தாய்மார்களும் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்ட வழிகள் சொல்கிறார்கள்.

இணை உணவை ஆரம்பிக்க வேண்டும்!

“குழந்தை பிறந்து ஆறு மாதங்கள்வரை தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை; தாய்ப்பால் மட்டுமே போதுமானது. குழந்தைக்குத் தேவையான அனைத்துச் சத்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, தாய்ப்பால் மூலமாகவே கிடைத்துவிடும்.

அதற்குப் பிறகு, குழந்தையின் வளர்ச்சிக்குத் தாய்ப்பால் மட்டுமே போதாது என்பதால், இட்லி, மசித்த சாதம் என இணை உணவுகளையும் சேர்த்துக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

இதனால் தாய்ப்பால் ஊட்டும் இடைவேளைகள் குறையும் என்பது, பணிக்குச் செல்லும் தாய்மார்களுக்கு ஆறுதலாக இருக்கும்.

என்றாலும், அம்மா காலை அலுவலகம் செல்வதிலிருந்து மாலை வீடு திரும்புவதுவரை, குழந்தை தாய்ப்பால் புகட்டப்படாமல் இருப்பதைத் தவிர்க்க, தாய்ப்பால் சேகரிப்பு முறையைப் பின்பற்றலாம்.

தாய்ப்பாலைச் சேகரிக்க, கடைகளில் கிடைக்கும் பிரெஸ்ட் பம்ப்பைப் பயன்படுத்தலாம். குழந்தை தூங்குகிற நேரத்திலோ அல்லது தாய்ப்பால் கொடுக்காத நேரத்திலோ இந்த பம்ப்பைப் பயன்படுத்தி தாய்ப்பாலை எடுத்துவைக்கலாம். பின்னர் வீட்டில் இருப்பவர்களை, குழந்தைக்கு அதைப் புகட்டச் சொல்லலாம். .

பிரெஸ்ட் பம்ப் கைகொடுக்கும்!

தாய்ப்பால் எத்தனை மணி நேரம் கெடாமல் இருக்கும்?

பம்ப் செய்து எடுத்த பால், நான்கு மணி நேரம்வரையிலும், ஃப்ரிட்ஜில் வைத்தால், மூன்று நாள்கள்வரையிலும் கெடாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜிலிருந்து தாய்ப்பாலை எடுத்து, அது சாதாரண அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் குழந்தைக்குப் புகட்டலாம்.

ஃபீடிங் பாட்டில், டம்ளர், ஸ்பூன் என அதைச் சேமிக்கும், குழந்தைக்குப் புகட்டும் பாத்திரங்கள், பயன்படுத்தும் பம்ப் ஆகியவற்றைச் சரியாகச் சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் அவசியம்.

தாய்ப்பாலை பம்ப் செய்யவில்லை எனில் தாய்க்கு அவதி!

பணிக்குச் செல்லும் பெண்களுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் இடைவேளை அதிகமாவதால், பால் கட்டிக்கொள்ளலாம்.

எனவே, பம்ப் மூலம் தாய்ப்பாலை வெளியே எடுப்பது குழந்தைக்குப் பால் கிடைக்கச் செய்வதோடு, தாயையும் பால் கட்டும் பிரச்னையிலிருந்து காக்கும்.

ஒருவேளை காலை தாய்ப்பாலை பம்ப் செய்துவிட்டு வந்த பின்னரும் அலுவலக நேரத்தில் தாய்க்கு பால் கட்டினால், ரெஸ்ட் ரூமுக்குச் சென்று அதை வெளியேற்றிவிட வேண்டும். கட்டின பாலை குழந்தைக்குக் கொடுக்கக் கூடாது என்பது இல்லை.

வீடு திரும்பியதும் மார்பைச் சுத்தம் செய்துவிட்டுப் புகட்டலாம். ஆனால், பால் கட்டிக்கொள்வது தாய்க்குத் தாங்க முடியாத வலியைக் கொடுக்கும்.

அது தீவிரமானால் உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் தவிர்க்க, பாலை அவ்வப்போது வெளியேற்றிவிடுவது அவசியம்.

பம்ப் பண்ணினால் பால் சுரப்பு அதிகரிக்கும்!

பொதுவாக, குழந்தைக்குப் பாலூட்டும்போது தாயின் உடலில் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கும்.

ஒன்று, பாலை வெளியேறவைக்கும். மற்றொன்று, மீண்டும் பாலை ஊறவைக்கும். அதனால்தான், `பாலூட்ட பாலூட்டத்தான் பால் ஊறும்’ என்பார்கள்.

குழந்தைக்குப் பால் ஊட்ட முடியாத சூழலில் பம்ப் பண்ணும்போதும் இந்த ஹார்மோன்கள் சுரந்து, மேற்சொன்ன இரண்டு செயல்களும் நடக்கவைக்கும்.

குழந்தைக்குப் பாலூட்டாமலோ, பாலை பம்ப் பண்ணாமலோ விடும் சூழலில், பால் சுரப்பு குறைந்துவிடும்.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button