தலைமுடி சிகிச்சை

தலைமுடி காக்கும் இயற்கையான வழிகள்!

அட்வைஸ் அதிகம் தரப்படும் விஷயமும் பெரும்பாலானோர் அதிகமாகக் கவலைப்படும் விஷயமும் தலைமுடிக்காகத்தான் இருக்கும். சில நேரங்களில் முடி உதிர்தல் பிரச்னை, பலருக்கு மன உளைச்சலையே ஏற்படுத்திவிடும். சிலருக்கு கெமிக்கல் ட்ரீட்மென்ட் எடுத்தும், நிரந்தரப் பயன் கிடைப்பதில்லை. இதற்கு என்னதான் தீர்வு?

ஹேர் சீரம்

பளபளப்பாகவும் மென்மையாகவும் முடி இருக்க வேண்டும். விளம்பரங்களில் காண்பிப்பதுபோல அலை அலையாகக் கூந்தல் வேண்டும் என்று ஆசைப்பட்டே பலரும் ஹேர் சீரம் பயன்படுத்துகிறார்கள். இது, சிக்கலான தலைமுடி படியவும், விருப்பத்துக்கேற்ற ஹேர்ஸ்டைலை செய்து கொள்ளவும் உதவுகிறது. சீரத்தில் உள்ள `செராமிக்’ என்ற ரசாயனம், முடிகளைச் சேதப்படுத்தும். அதாவது, மீண்டும் நாம் சீரம் பயன்படுத்தித்தான் முடியைப் படியவைக்க முடியும் என்ற நிலைக்கு முடியின் தன்மையை மாற்றிவிடும். சீரம் இல்லாமல் எந்த ஹேர்ஸ்டைலும் செய்ய முடியாது என்ற நிலையும் ஏற்படலாம்.

தீர்வு

சீரம் இல்லாமல் தலைமுடியைப் படியவைப்பதற்கு, கூந்தலை மென்மையாக மாற்றுவதற்கு சில எளிய தீர்வுகள் உள்ளன. கற்றாழை, தேன், கிளிசரின், விளக்கெண்ணெய், ஜொஜோபா எண்ணெய், ஜெரெனியம் (Gerenium), இலாங் இலாங் எண்ணெய் ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் அளவில் கலந்து பூசி, ஒரு மணி நேரம் கழித்து, ஷாம்பு இல்லாமல் கூந்தலை அலச வேண்டும்.

இது இயற்கையாகவே முடிக்கு மென்மைத் தன்மையைக் கொடுக்கும். உடைந்துபோன கியூட்டிக்கிள்களைச் சரிப்படுத்தக்கூடிய தன்மை இவற்றுக்கு உண்டு. இதைத் தொடர்ந்து பயன்படுத்தினால், முடிகள் சேதமாகாமல் இருக்கும். மென்மையாக முடி மாறுவதால் விரும்பிய ஹேர்ஸ்டைலைச் செய்துகொள்ள முடியும்.

ஸ்ட்ரெயிட்டனிங் எஃபெக்ட்

முடியின் அமைப்பு, தோற்றம் எல்லாம் நமது மரபணுக்களின் மூலமாக நமக்குக் கடத்தப்படுகின்றன. அதாவது நாம் பிறப்பதற்கு முன்பே அது நிர்ணயிக்கப்படுகிறது. சுருட்டை முடி, பொலிவான முடி போன்றவை அப்பா, அம்மாவிடமிருந்து நமக்கு வருவது. இதை முற்றிலுமாக மாற்ற ஸ்ட்ரெயிட்டனிங், கர்லிங், பெர்மிங் போன்றவற்றை செய்துகொள்வது நிச்சயம் கூந்தலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும். 60 முதல் 70 சதவிகித முடிகள் நாளடைவில் உதிர்ந்துவிடும். இரு மாதங்களுக்குள் முடியின் தரமும் குறைந்துவிடும். சுருட்டை முடியை நீளமாகவும், ஸ்டிரெயிட்டான முடியை சுருட்டையாகவும் மாற்றுவது இயல்புத்தன்மைக்கு எதிரானது. இப்படி மாற்றுவதால் முடிகள் உடையும்; வேர்கள் பாதிக்கப்படும்.

தீர்வு

பாதிப்புகள் இல்லாமல் இயற்கையான முறையில் ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய வேண்டுமெனில், மைதா மாவு மற்றும் சோள மாவை சரிபாதி அளவில் எடுத்து, பேஸ்ட் பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும். இதில் 5 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் கிளிசரின் கலந்து, இந்த கலவையை முடியில் லேயர் லேயராக எடுத்துப் பூச வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படிச் செய்தால் ஓரளவுக்கு முடி ஸ்ட்ரெயிட்டாக இருக்குமே தவிர, ஸ்ட்ரெயிட்டனிங் செய்தது போன்ற தோற்றம் இருக்காது. சுருள் முடி அலை அலையாக (wavy hair) மாறுமே தவிர, நேராக மாறாது.

சில்க்கி அண்ட் ஸ்மூத் ஹேர்

முறையான பராமரிப்பு இல்லாதது, ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல், தவறான ஷாம்பு பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி கடினமாக இருக்கும். இவற்றைச் சரிசெய்ய, பார்லர்களில் ரசாயன ட்ரீட்மென்ட் எடுப்பது நிரந்தரத் தீர்வு கிடையாது.

கட்டுக்கடங்காத முடியை மிருதுவான முடியாக மாற்றுவதற்குக் குறைந்தது ஒரு மாதமாவது ஆகும். செய்த அடுத்த நிமிடமே பலன் தெரிந்தால், அது நிரந்தரமாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தீர்வு

வாரத்தில் மூன்று நாட்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். அதாவது விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் – தலா 1 டீஸ்பூன் எடுத்து, மூன்றையும் மிதமாகச் சுடவைத்து, பஞ்சில் இந்த எண்ணெயைத் தொட்டு ஸ்கால்ப்பில் (மண்டைப்பகுதியில்) மிதமாக அழுத்தம் கொடுத்துத் தடவ வேண்டும். 50 முறை நன்றாக சீப்பால் வாரி, மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் உள்ள வறட்சி நீங்கும். முடி தானாகவே மென்மையாக மாறும்.

இதனுடன் வாரம் ஒரு நாள் மட்டும் ஒரு ஹேர் பேக் போட வேண்டும். நன்கு பழுத்த அவகேடோவை (பட்டர் ஃபுரூட்) மிக்ஸியில் அடித்து, லாவண்டர் எண்ணெய் மற்றும் ரோஸ் எண்ணெய் – தலா 20 சொட்டு கலந்து, தேன், கிளசரின், விளக்கெண்ணெய் – தலா 30 மில்லி சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். தேவைப்படுவோர் மட்டும் முட்டையின் மூன்று மஞ்சள் கருவைச் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை நன்கு கலந்து, மூன்று மணி நேரம் ஊறவிடவும். பிறகு, ஒவ்வொரு லேயராக முடியில் பூசி, கொண்டை போட்டுக்கொள்ளவும். கடைகளில் அலுமினியம் ஃபாயில் அல்லது கிளிங் ஃபிலிம் (Cling film) கிடைக்கும். இதை வாங்கி தலையில் அப்படியே ஒட்டவைத்துவிட வேண்டும்.

இதனால், மண்டையில் வியர்க்கத் தொடங்கும். ஸ்கால்ப் மற்றும் முடி இரண்டுமே சாஃப்ட் ஆகிவிடும். இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். இதுபோல நான்கு முறை பேக் செய்த பிறகு, முடி சில்க்கி அண்ட் ஸ்மூத்தியாக இருக்கும்.

கலரிங் எஃபெக்ட்

டையில் இருக்கும் அம்மோனியா உள்ளிட்ட ரசாயனங்கள் உடலில் நச்சுக்களை சேர்க்கும். இவை ரத்த நாளங்களில் கலந்து கல்லீரல், சிறுநீரகம், சருமம் ஆகிய உறுப்புகளைக்கூட பாதித்துவிடும். இதைத் தவிர்க்க, ஹென்னா தயாரித்து, பூசிக்கொள்ளலாம்.

தீர்வு

தேவையான ஹென்னா பொடி மற்றும் பீட்ரூட் சாற்றுடன் லவங்கப் பொடி, தேன், விளக்கெண்ணெய் தலா இரண்டு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன் கலந்து, முதல்நாள் இரவே ஊறவைத்துவிட வேண்டும். மறுநாள் இதைக் கூந்தலில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளித்தால், கூந்தலுக்கு இயற்கையான நிறம் கிடைத்திருக்கும். முடி வறட்சியில்லாமல் மென்மையாக இருக்கும்.p41a

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button