நாமக்கல் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மனைவியை கொலை செய்த கணவர், தானாக முன்வந்து போலீசில் சரணடைந்தார்.
நாமக்கல்லை அடுத்த தூசூர் ஊராட்சி சம்பா மேடு பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா – பிரமிளா தம்பதி. 11ம் வகுப்பில் ஒரு மகளும், 10ம் வகுப்பில் ஒரு மகனும் உள்ளனர். இவரது கணவர் ராஜா கூலித் தொழிலாளியாகவும், அவரது மனைவி பிரமிளா தனியார் பள்ளி ஆசிரியையாகவும் பணிபுரிந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, ஆத்திரமடைந்த கணவர் ராஜா, வீட்டில் இருந்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தையடுத்து, ராஜா காவல் நிலையம் சென்று மனைவியைக் கொன்றதாகக் கூறி போலீஸில் சரணடைந்தார்.
இதையடுத்து நாமக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரமீளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.